சிலாங்கூர் மாநிலம், கிள்ளான் பகுதியில் நடந்த துயரமான சாலை விபத்தில் தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளை யாயாசான் பெலஜாரான் மாரா திட்டத்தின் கீழ் மஜ்லிஸ் அமானா ராக்யாட் எனப்படும் மாரா அமைப்பானது தத்தெடுத்துள்ளது.
இந்நடவடிக்கை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் நலனுக்கும் தேவையான அனைத்து ஆதரவுகளையும் மாரா அமைப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தைகள் ஆரம்பப் பள்ளி நிலையில் இருக்கும் போது மாதந்தோறும் 120 ரிங்கிட் வழங்கப்படும் என்றும், அவர்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் போது அத்தொகையானது 150 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்றும் மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரப் வஜ்டி டூசூக்கி தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் கல்வியை முழுமையாக நிறைவு செய்யும் வரை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேவையான ஆதரவுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 33 வயதான அமிருல் ஹபீஸ் ஒமார், ஜாலான் ராயா பாராட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவரை மோதித் தள்ளியது.
இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டஅமிருல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், காரை செலுத்தியவர் மீது நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.








