கோலாலம்பூர், ஏப்ரல் 30-
மலேசிய கூட்டுறவு சங்கங்களில் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு கொண்டவரும், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும் , KKMP எனப்படும் மலேசிய பயனீட்டாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த டத்தோ பி.பலராம் பெயரில், கூட்ட அறை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள மலேசிய பயனீட்டாளர் கூட்டுறவு சங்கமாக Koperasi Konsumer Malaysia Berhad- டின் கட்டடத்தில் முக்கிய கூட்ட அறை ஒன்றுக்கு டத்தோ பலராம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்ட அறையை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ B. சகாதேவன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காலஞ்சென்ற டத்தோ பலராம் அவர்களின் துணைவியார், மலேசிய பயனீட்டாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் என். சிவநேசன் மற்றும் கூட்டுறவு சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கெடா மாநிலத்தில் ஓர் ஆசிரியராக தமது பணியைத் தொடங்கிய முன்னாள் மேலவை உறுப்பினருமான டத்தோ பலராம், கூட்டுறவு நடவடிக்கைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டினால் அவர் பொறுப்பு வகித்த கூட்டுறவு சங்கங்கள் அதிக சொத்துக்கள் வாங்குவதற்கு பெரும் துணையாக இருந்தார். டத்தோ பலராம் சீரிய சேவையை நினைவுகூரும் வகையில் அவர் தலைமையேற்று இருந்த மலேசிய பயனீட்டாளர் கூட்டுறவு சங்கத்தின் கட்டடத்தில் முக்கிய கூட்ட அறைக்கு டத்தோ பலராம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.








