கோலாலம்பூர், ஜூன்.21-
நாடெங்கிலும் போதைப்பொருள் கலந்த வேப் திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவங்கள், நாட்டில் வேப் எனப்படும் மின் சிகரெட்டின் பயன்பாட்டைத் தடை செய்வதற்கான காரணத்தை வலுப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள Tun Razak Exchange MRT நிலையத்தில் நடைபெற்ற புகைபிடித்தல் மற்றும் வேப் பயன்பாட்டிற்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், கடந்த நான்கு மாதங்களில், இது போன்ற 402 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், benzodiazepine, nimetazepam, MDMA, cannabinoids, tetrahydrocannabinol, methamphetamine போன்ற ஆபத்தான செயற்கை போதைப்பொருட்கள் வேப் திரவங்களில் கண்டறியப்பட்டுள்ளன என்றும், குறிப்பாக சிறார்களிடையே இவற்றின் பயன்பாடு முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், மின் சிகரெட்டிற்குத் தடை விதிக்கும் விவகாரம், தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த செயல்முறையில் சுகாதார அமைச்சும் பங்கேற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வேப் பயன்பாட்டுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் பல்வேறு அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக, உள்துறை அமைச்சு மற்றும் போலீசாருடன் இணைந்து, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விவரித்துள்ளார்.








