கோலாலம்பூர், ஜூன்.21-
தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி போலீசில் புகார் அளித்த இளம் பெண் உட்பட இருவருக்கு 14 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இருந்து இந்த தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
பிணைத் தொகை கோரி நடத்தப்பட்ட இந்த பொய்யான கடத்தல் சம்பவம் தொடர்பாக, 1961ஆம் ஆண்டின் ஆள்கடத்தல் சட்டம் பிரிவு 3(1)-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜோகூர் வசிக்கும் தனது 20 வயதான தனது மகள் கடத்தப்பட்டதாகக் கூறி, அவரது 43 வயதான தாயார் பாடாவான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஜோகூரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அந்த 20 வயது பெண்ணையும், 27 வயதான நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவமானது பொய்யான நாடகம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.








