பெட்டாலிங் ஜெயா, ஜூன்.21-
மலேசியர்களுக்கான மானிய டீசலின் விலை வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், டீசலுக்கு மானியம் வழங்கும் முறை நாடு முழுவதும் ஒருநிலைப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக, தற்போது நடைமுறையிலுள்ள ரோன்95 மானிய பெட்ரோலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மைகாட் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் மானிய டீசல், லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் மானியமற்ற டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு 4 ரிங்கிட் 37 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், தகுதி பெறும் மலேசியர்கள் மட்டுமே மானிய டீசலைப் பெற முடியும்.
இதனிடையே, நாடு முழுவதும் மானிய டீசல் விலையை லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 காசுகளாக குறைக்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா நாளை அறிவிக்கவுள்ளார்.








