ஜோகூர் பாரு - ஆயர் ஈத்தாம் சாலையில், சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலைக்கு எதிரே நேற்று மதியம் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 19 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பஹ்ரின் முகமட் நோ வெளியிட்டுள்ள தகவலில், கைது செய்யப்பட்ட இளைஞர் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ250 காரை அதிவேகமாகவும் பொறுப்பற்ற முறையிலும் ஓட்டிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அவருடன் அவரது மூத்த சகோதரரான 22 வயது இளைஞர் பிஎம்டபிள்யூ 530இ காரை ஓட்டிச் சென்றதாகவும் நம்பப்படுகின்றது.
நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில், டொயோட்டா வியோஸ் காரில் இருந்த 10 வயது சிறுமி உட்பட நான்கு பேரும், பிஎம்டபிள்யூ 530இ காரை செலுத்திய இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்வழக்கானது சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 -இன் பிரிவு 41(1) மற்றும் பிரிவு 42(1) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








