மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னரான சுல்தான் இப்ராகிம், அனைத்து அரசியல் தலைவர்களும் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடித்து, பொதுமக்கள் முன் கருத்து தெரிவிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக தேர்தல் காலங்களில், அரசியல் தலைவர்கள், மக்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடிய அல்லது சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரங்களைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி இஸ்தானா நெகாராவில் நேற்று நடைபெற்ற கூட்டரசு விருதுகள், கௌரவப் பட்டங்கள் வழங்கும் விழாவில் உரையாற்றிய மாமன்னர், தேர்தல் காலம் சிலருக்கு தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், பொதுமக்களின் ஆதரவைப் பெறவும் ஒரு தளமாக மாறிவிடுகிறது.
எனவே, அரசியல் தலைவர்கள் பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் செயல்பட்டு, நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் அமைதி, இன நல்லுறவு மற்றும் சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான கருத்துக்கள் அல்லது நடவடிக்கைகளைத் தவிர்ப்பது அனைத்து அரசியல் தரப்பினரின் பொறுப்பாகும் என்பதையும் மாமன்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.








