சிரம்பானில் தம்பதியர் மீது மிளகுத் தூள் தெளிப்பானைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 50 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இரவு 11.45 மணியளவில், அந்நபர் அவரது வீட்டின் வெளியே கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் யாதிம் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 31ஆம் தேதி மாலை 6 மணியளவில், தமது காரில் சென்று கொண்டிருந்த தம்பதிக்கு அருகே வந்த மற்றொரு காரில் இருந்து இறங்கிய அந்நபர் இச்செயலைப் புரிந்ததாக நம்பப்படுகின்றது.
இந்த தாக்குதலால் உடலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தம்பதியர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபருக்கு, போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஏற்கனவே மூன்று முந்தைய பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








