ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் சட்டவிரோதமாக இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அத்துமீறி நுழைந்து, அங்கு இஸ்ரேலியக் கொடியை ஏற்றிய சம்பவத்திற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்-அக்ஸா மசூதியை யூதமயமாக்கும் எந்த முயற்சியும் அருவருப்பானது மட்டுமல்ல, அந்தப் புனிதத் தலத்தின் புனிதத்தன்மையை அவமதிக்கும் செயலாகும் என்று விமர்சித்துள்ளது.
மேலும், இஸ்ரேலிய சயோனிச ஆட்சியின் ஆதரவுடன் குடியேற்றவாசிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, அல்-அக்ஸா புனிதத் தலத்தின் வரலாற்று மற்றும் கலாசார அடையாளங்களை மாற்றும் முயற்சியாகும் என்றும் அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் தூண்டுதல் நிறைந்தவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பொறுப்பை வெளிப்படையாகப் புறக்கணிப்பதாகவும் மலேசியா தெரிவித்துள்ளது.
வெளிப்படையாக நடைபெற்று வரும் இந்த விரோத மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் அமைதியாக இருக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மீறல்களை உடனடியாக நிறுத்தவும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.








