சூதாட்டத்திற்கு எதிரான காரணத்தை மட்டும் முன்வைத்து, இதர விளையாட்டு பந்தயம் மற்றும் லாட்டரி விற்பனைகளுக்கு கெடா மாநில அரசாங்கம் முழுமையான தடை விதிக்க முடியாது என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் கூட்டரசு அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணை மற்றும் உள்ளாட்சி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வரம்புகளுக்குள் மட்டுமே இருப்பதாக அப்பீல் நீதிமன்ற நீதிபதி பாயிஸா ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுக்கு உரிமம் வழங்குவதை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் இருந்தாலும், அது கட்டிடத்தின் நிலை, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, சுகாதார வசதிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறதா, மற்றும் அந்த இடத்தின் பொருத்தம் போன்ற வளாகம் தொடர்பான காரணிகளின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இத்தீர்ப்பின் காரண விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, "சூதாட்டத்திற்கு எதிரான கொள்கை" என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அனைத்து லாட்டரி மற்றும் இதர பந்தய வணிகங்களுக்கும் ஒரே நேரத்தில் முழுமையான தடை விதிப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறுவதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு, மாநில அரசின் அதிகார வரம்புகள் மற்றும் கூட்டரசு சட்டங்களின் கீழ் இயங்கும் வணிகங்களின் உரிமைகள் தொடர்பான முக்கியமான சட்ட விளக்கமாகக் கருதப்படுகிறது.








