சிலாங்கூர், மே 02-
தாய்மொழி பள்ளிகளிலான தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளை மூடப்படவேண்டும் என தொடர்ந்தாற்போல் வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுவரும் விவகாரத்தில், பெரிக்காதான் நசியனால் கூட்டணி மற்றும் பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின்-னின் நிலைப்பாடு என்ன? என்று DAP உதவித் தலைவர் தெரேசா கோக் கேள்வியை எழுப்பினார்.
தாய்மொழி பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என்றும் அதனை அகற்றமுனைவோரின் எந்தவொரு முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கப்படாது என அவர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் தெரேசா கோக் வலியுறுத்தினார்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பெர்சத்து-வின் இளைஞர் பிரிவு தலைவரும் அப்போதைய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சருமான வான் ஃபைஹ்சல், தாய்மொழி பள்ளிகள் மூடப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, தாய்மொழி பள்ளிகளில் மலாய் மொழி பாடம் வலுப்படுத்தப்பட வேண்டுமென்றே தாம் கூறியதாக அவர் மலுப்பினார்.
அண்மையில் கூட, கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கும் பாங் சாக் தாவோ, சீனப் பள்ளியில் கல்வி பயின்றது குறித்து, PAS கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படியாக, பெரிக்காதான் நசியனால்-லைச் சேர்ந்த பலர், தாய்மொழி பள்ளிகளுக்கு எதிராக பேசிவரும் நிலையில், முகைதீன் யாசின் இதுவரையில் அது குறித்து ஏதும் கருத்துரைக்காமல் இருந்து வருவதை தெரேசா கோக் சாடினார்.








