தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மே 3, 4 ஆகிய தேதிகளில் பேரா, தாப்பா, கம்போங் சுங்கை ஓடக்கில் உள்ள பூர்வகுடி கிராமத்தில் ஒற்றுமையை மிளிரச்செய்யும் எமரக் பெர்படுவான் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.
தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தலைமையில் அமைச்சின் அதிகாரிகள் அந்த பூர்வகுடி கிராமத்திற்கு வருகை புரிந்து, அவர்களின் வாழ்வியல் சூழலுடன் இரண்டறக்கலந்த இந்த நிகழ்வில் பூர்வகுடி மக்களும் அவர்களின் பிள்ளைகளும் பெருவாரியாக கலந்து சிறப்பித்தனர்.
தாப்பாவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் சுங்கை ஓடக்- கில் செனோய் இனத்தைச் சேர்ந்த பூர்வகுடியினர், தங்களுக்கென்று தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கும் அவர்கள் ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்வுகளில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.
கம்போங் சுங்கை ஓடக்- கில் ஏற்படுத்தப்பட்டுள்ள கிராம வாசக சாலையில் சிறார்களுடன் கதைச் சொல்லும் நிகழ்விலும் துணை அமைச்சர் கலந்து கொண்டதுடன் சிறார்களை கதை சொல்ல சொல்லி நிகழ்விற்கு சிறப்பு சேர்ந்தார்.
பின்னர் கிராம மக்களுடன் கலந்துரையாடிய நிகழ்வில் பல சுவாராஷ்மான சம்பவங்கள் துணை அமைச்சரை மட்டுமின்றி வருகையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தவிர கம்போங் சுங்கை ஓடக் சமூக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூர்வகுடியினரின் பின்னல் கலை தொடர்பான செயல்முறை காட்சி, உள்ளூர் மக்களுக்கு பாகூல் ரஹ்மா அன்பளிப்பு கூடைகளை வழங்குதல், கதைச் சொல்லும் போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு பரிசுகள் வழங்குதல், சாலை பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு கையேடு விநியோகம் ஆகிய நிகழ்வுகளும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.








