வணிக வளாகங்களுக்குள் இருக்கும் விளையாட்டுக் கூடங்களுக்கான பொழுதுபோக்கு வரி மற்றும் உரிமக் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து சிலாங்கூர் அரசு ஆலோசித்து வருகிறது.
இதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு RM600 ஆக இருந்த கட்டணம், தற்போது பூங்காவின் வகையைப் பொறுத்து RM6,000 வரை அதிகரித்துள்ளது என்று பூங்கா உரிமையாளர்கள் சங்கம் மேட்ஃபா புகார் கொடுத்துள்ளது. இந்த புகாரைத் தொடர்ந்தே சிலாங்கூர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு சிறு மற்றும் நடுத்தர பூங்கா நடத்துநர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளதாக ஊராட்சி மற்றும் சுற்றுலாத்துறைக்கான சிலாங்கூர் மாநில எக்ஸ்கோ டத்தோ ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பூங்காக்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் கல்வி சார்ந்த விஷயங்களையும் கொண்டுள்ளதால், வரும் 'சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு 2026' இலக்கை முன்னிட்டு இத்துறையைத் தக்கவைக்க ஊராட்சி அமைப்புகளுடன் இணைந்து இந்த மறுஆய்வு விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.








