நாட்டில் நீடித்த வரலாற்றைக் கொண்ட தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் 78 ஆம் ஆண்டு நிறைவு விழா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரையில் சிரம்பான் Wisma Ceylonese Hall மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. .
இந்த 78 ஆண்டு நிறைவு விழாவில் மாநில மற்றும் தோட்ட கமிட்டி உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட சிறப்பு பிரமுகர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அங்கத்தினர்களின் சம்பள உயர்வு உட்பட அவர்களின் வாழ்வாதார ஏற்றத்திற்காக தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் உறுதி தெரிவித்தார்.
தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்திற்கும், மாப்பா ( MAPA ) எனப்படும் தோட்ட முதலாளிமார்கள் சங்கத்திற்கும் இடையிலான கூட்டு சம்பளப் பேச்சுவார்த்தை தோல்விக் கண்டு, இவ்விவகாரத்தை தொழிலியல் நீதிமன்றத்திற்கு சங்கம் கொண்டு சென்று இருப்பதையும் டத்தோ சங்கரன் சுட்க்காட்டினார். ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இவ்வழக்கு விசாரணை, வரும் நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனித வள அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் அடிப்படையில் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்குரிய ஒரு பரிந்துரையை மனித வள அமைச்சு, சங்கத்திடம் முன்வைத்திருப்பதாக டத்தோ சங்கரன் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் மனித வள அமைச்சின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக சங்கம் காத்திருப்பதாக சங்கரன் குறிப்பிட்டார்.








