கோலாலம்பூர், ஜூலை.28-
இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மலேசிய அரசாங்கம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை உள்துறை அமைச்சு முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மலேசியாவுடன் தூதரக உறவு இல்லாததால், இஸ்ரேல் அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு பயண ஆவணங்களும் மலேசியாவிற்குள் நுழைவதற்கு அங்கீகரிக்கப்படமாட்டாது என உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு, குடிநுழைவுத் துறை, போலீஸ் படை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு முகமைகள் இணைந்து எல்லைப் பகுதிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு வெளிநாட்டினரும் 1959 மற்றும் 1963 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது சமரசமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.








