சிரம்பான், ஜூலை.28-
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சிரம்பானில் புதிய மருத்துவமனை அமைப்பதற்கான திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த முக்கிய அறிவிப்பை மாநில இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் வெளியிட்டுள்ளார்.
சிரம்பான், Tuanku Ja'afar மருத்துவமனையில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்க, 2024-ஆம் ஆண்டு மாநில அரசால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குப் மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமினுடின் குறிப்பிட்டார்.
13-வது மலேசிய திட்டத்தின் கீழ் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் மூலம் 30.15 மில்லியன் ரிங்கிட் ஆரம்ப நிதி நேரடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவமனை அமைப்பதற்காக பண்டார் என்ஸ்டெக் (Bandar Enstek) பகுதி தேர்வு செய்யப்பட்டு இருப்பதையும் அமினுடின் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நிலம் கையகப்படுத்தும் செலவு மிச்சப்படுத்தப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்படும். இதற்கான நிலப் பரிமாற்றக் கடிதத்தை சுகாதார அமைச்சு , உயர்கல்வி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் என மந்திரி பெசார் அமினுடின் குறிப்பிட்டுள்ளார்.








