ஷா ஆலாம், ஜூலை.28-
செத்தியா ஆலாம் (Setia Alam) பகுதியில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஷா ஆலாம் மாநகர மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார்.
நில ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில பாதுகாப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குரியதா அல்லது தனியார் நிலமா என்பதை ஆராய்ந்து நில உரிமையாளர்களுக்கு உடனடி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலும், அங்கு மீண்டும் நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் குடியிருப்புகள் உருவானது குறித்து குடிநுழைவுத்துறை விசாரித்து வருகிறது என்று அமிருடின் தெரிவித்தார்.
இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டதும், மற்ற அமலாக்க முகமைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டுச் சோதனை நடத்தப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்துள்ளார்.








