கோத்தா பாரு, மே 28-
ஆயுதத்தை பயன்படுத்தி கும்பல் ஒன்றுடன் இணைந்து கொள்ளையடித்ததாக முடிதிருத்தும் இளைஞன் ஒருவர் கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
21 வயது முகமது அல்தாஃப் இசிராஃப் ஜாஸ்லான் என்கிற அந்த முடிதிருத்தும் இளைஞன், நீதிபதி அஹ்மத் பஸ்லி பஹ்ருதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 395 மற்றும் 397 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அவ்விளைஞன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த மே 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் கிளந்தான், குபாங் கெரியன், கம்புங் வக்காஃப் ஸ்டான் -னில் 26 வயது முஹம்மது சஃபுவான் ஹாரிஸ் இப்ராஹிம் என்பவரிடம் ஆயுதத்தை காட்டி மிரட்டி யமஹா Y15 ரக மோட்டார் சைக்கிள், மூன்று கைத்தொலைப்பேசிகள் உட்பட தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








