இந்தியாவின் பிரபல மாடல் அழகி திவிஷா சர்மாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற கேள்விக்கு தற்போது மருத்துவ ஆய்வு முடிவு கிடைத்துள்ளது! உடலில் உடல் ரீதியான தாக்குதல் அல்லது போராட்டம் நடந்ததற்கான முக்கிய காயங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட இரண்டாவது பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில், ஐந்து பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 11 பக்க இறுதி தடயவியல் அறிக்கையை ஜூலை 10ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ-யிடம் சீலிட்ட உறையில் சமர்ப்பித்துள்ளது.
விசாரணையில் சர்ச்சைக்குரியதாக இருந்த ஜிம்னாஸ்டிக் பெல்ட் உள்ளிட்ட தடயங்களையும் மருத்துவக் குழு ஆய்வு செய்துள்ளது.
இதற்கிடையே, திவிஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் மீது வரதட்சணைக் கொடுமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 636 பக்க குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் ‘மிஸ் புனே’ பட்டம் வென்ற திவிஷா, திருமணமான ஐந்து மாதங்களிலேயே, கடந்த மே 12ஆம் தேதி போபாலில் உள்ள கணவர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.








