இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டுவரப்படுவாரா? — அதற்கான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை! விசாரணைகள் முழுமையாக முடிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று உள்துறை அமைச்சும், தொடர்புத்துறை அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைஃபுதீன், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை முதலில் தனது விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்றார்.
அதன்பின்னரே, அந்த விமானியை மலேசியாவுக்கு நாடு கடத்தக் கோரிக்கை விடுப்பதா என்பது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சைஃபுதீன் கூறினார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதால், தற்போது அவர் அந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டவர் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.








