புத்ராஜெயா, மே 28-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா மற்றும் MDH கறி மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
அந்த இரு வகை மசாலாப்பொருட்களிலும் பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த இரு வகை மசாலாப் பொருட்களை விற்பனை செய்வதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளும்படி அனைத்து வணிகர்களையும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் எத்தலின் ஆக்சைட் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எத்தலின் ஆக்சைட்’ உணவில் பயன்படுத்த அனுமதி இல்லை. வேளாண் பொருள்கள் நுண்ணுயிர் கிருமிகளால் கெட்டுப்போகாமல் இருக்க ‘எத்தலின் ஆக்சைட்’ பயன்படுத்தப்படும்.
‘எத்திலின் ஆக்சைட்’ இருக்கும் உணவை நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட்டால் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படலாம் என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.








