ஈப்போ, ஜூன் 14-
தனது மனைவியை அடித்து, பலமுறை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஓர் உணவக கடையின் விற்பனையாளர் ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
56 வயது வோங் சூன் ஃபூ என்ற அந்த உணவக கடையின் விற்பனையாளர் மாஜிஸ்திரேட் எஸ் புனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் தலையசைத்தார்.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவிருப்பதால் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அவ்வாடவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 12 பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 9 மணி வரையில் ஈப்போ, கம்போங் சிமி, லாலுவான் சிமி 11 என்ற இடத்தில் தனது 48 வயது மனைவியான யூ மீ ஃபூங் - கை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் அதை அந்த தம்பதியரின் 12 வயது மகள் நேரில் பார்த்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.








