கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாமல் ஆயிரக்கணக்கான வெள்ளி வருமான வரி பாக்கி, நிலுவையில் இருந்ததால் மலாக்கா மாநிலத்தில் இரண்டு முன்னணி அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை அகற்றப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில வருமான வரி வாரியம் அறிவித்துள்ளது.
மலாக்கா மாநிலத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த பத்து பேரில் அந்த முன்னணி அரசியல்வாதிகளும் அடங்குவர் என்று மாநில இயக்குநர் Mohd Shahriz Ramli தெரிவித்துள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கு எதிராக 1967 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
எனினும் அவ்விருவரும் தங்களின் வருமான வரி பாக்கியை முழுமையாக செலுத்தி விட்டதால், அவர்களுக்கு எதிரான தடையும் அகற்றப்பட்டுள்ளதாக Mohd Shahriz Ramli தெரிவித்தார்.








