கோலாலம்பூர், மே 28-
நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவில், தேர்வை எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 525 மாணவர்களில் 11 ஆயிரத்து 713 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A பெற்று, சிறந்த அடைவு நிலை சான்றிதழைக் கொண்டிருந்த போதிலும் 10 ஆயிரத்து 160 மாணவர்கள் இத்தேர்வில் அமரவில்லை என்று கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
தொடக்கப்பள்ளிகளில் 6 ஆம் ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வான UPSR மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான PT3 ஆகிய தேர்வுகள் அகற்றப்பட்ட நிலையில் மாணவர்களின் 11 வருட கல்விக்கு அரசாங்கத்தின் முக்கிய முதல் தேர்வாக கருதப்படும் SPM தேர்வை பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதாமல் தவறவிட்டு இருப்பது பெரும் கவலை அளிக்கும் விஷயமாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் பாரத்தில் கல்வியை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றது, இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டது, நோய் மற்றும் விபத்து போன்ற காரணங்களினால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் முக்கிய அரசாங்க தேர்வான SPM தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் , மிகப்பெரிய எண்ணிக்கையில் ஐந்தாம் படிவ மாணவர்கள் இத்தேர்வை எழுத தவறியிருப்பதற்கான உண்மையான காரணத்தையும், எதிர்காலத்தில் இதனை தடுப்பதற்கான வழிவகைகளை ஆராயவும் கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.








