பேராக், ஈப்போ, தாமான் முஜுர் பெர்ச்சமிலுள்ள ஒரு வீட்டில், மூதாட்டி ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தை, போலீஸ் கொலை சம்பவமாக வகைப்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த அச்சம்பவம் முதலில் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆயினும், ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை மணி 9.15அளவில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வில், 60 வயதுடைய அம்மூதாட்டியின் உடலில், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்துள்ளது உறுதிசெய்யப்பட்டது.
அதனையடுத்து, அச்சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதாக, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் ஜைனல் ஆபிடின் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், உயிரிழந்த மூதாட்டியின் 36 வயதுடைய மகனை கைது செய்த போலீஸ் 3 நாட்களுக்கு அவரை தடுப்புக்காவலிட்டுள்ளது.
தொடக்கக்கட்ட விசாரணையில், போதைப்பொருள் வழக்கு உட்பட 11 முந்தையக் குற்றப்பதிவுகளை அவ்வாடவர் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளதாக அபாங் ஜைனல் கூறினார்.








