மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், முன்னாள் தலைமை ஆணையர் தன் ஸ்ரீ ஆசாம் பாக்கிக்கு எதிராக வர்த்தகர் ஆல்பர்ட் டெய் அளித்த குற்றவியல் மிரட்டல் புகார், போதிய ஆதாரங்கள் இல்லாததால் 'மேல் நடவடிக்கை இல்லை' என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சபாவில் உள்ள அரசியல்வாதிகளின் ஊழல்களை வெளிப்படுத்த முயன்றபோது ஆசாம் பாக்கி தன்னை மிரட்டியதாக ஆல்பர்ட் டேய் புக்கிட் அமான் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இக்குற்றச்சாட்டை மறுத்த ஆசாம் பாக்கி, கடந்த ஜூன் 3ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின், குற்றவியல் மிரட்டலுக்கான கூறுகள் நிரூபிக்கப்படாததால் இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.








