சுங்கை பட்டாணி, ஜூலை.28-
கெடா மாநிலம் சுங்கை பட்டாணி, புக்கிட் செலம்பாவ் பகுதியில் உள்ள ஒரு மர ஆலைக்கு, நேற்று காலை, கையெறி குண்டு போன்ற பொருளும், மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் வெளியிட்டுள்ள தகவலில், காலை 10 மணியளவில் ஆலையின் நுழைவாயிலில் அந்தப் பொருளும், மிரட்டல் கடிதமும் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு அகற்றும் பிரிவு சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட பரிசோதனையில், கையெறி குண்டைப் போல் தோன்றிய அந்தப் பொருள் செயல்படாத ஒன்று என்பது தெரிய வந்துள்ளது.
அதேவேளையில், சிவப்பு மையால் மலாய் மொழியில் எழுதப்பட்டிருந்த மிரட்டல் கடிதத்தில், மர ஆலை தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.








