ஷாஹ் அலாம், ஏப்ரல் 18-
இந்தோனேசியா, ருவாங் மலையில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்- KLIA-விலிருந்து சபா, சரவாக்-விற்கும் அல்லது அவ்விரு மாநிலங்களிலிருந்து KLIA-விற்குமான சில பயணங்களை மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இன்று ரத்து செய்துள்ளது.
ருவாங் மலையில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பை குறித்த நிலவரங்களை தனது தரப்பு அணுக்கமாக கண்காணித்துவரும் வேளையில், ரத்து செய்யப்படும் பயணங்களால் பாதிக்கப்படுகின்ற பயணிகளுக்கு அது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது தெரியப்படுத்தப்படும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் கூறியிருந்தது.
நிலைமை சரியானவுடன் பாதிக்கப்பட்ட பயணிகளை, மாற்றுவழி பயணங்களின் வாயிலாக அழைத்து செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். பயணிகள் மற்றும் தங்களின் பணியாளர்களின் நலன் கருதி, பயணங்களை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ரத்து செய்யப்படும் பயணங்கள் குறித்த நிகழ்நிலைப்படுத்தப்பட்ட தகவலை, My Booking தளம் வாயிலாகவும் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வாயிலாகவும் பயணிகள் அறிந்துக்கொள்ளலாம் என மலேசியா ஏர்லைன்ஸ் வலியுறுத்தியது.








