இந்தியர்களின் உருமாற்றும் பிரிவான மித்ராவின் தர்ம மடானி மற்றும் செலிக் மதானி ஆகிய திட்டங்களின் வாயிலாக இந்திய சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்கான இரு முக்கிய திட்டங்களுக்கு 12.23 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது.

பி40 பிரிவு இந்தியக் குழந்தைகளுக்குத் தரமான ஆரம்பக் கல்வியை வழங்க 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 162 மழலையர் பள்ளிகளைச் சேர்ந்த 3,612 குழந்தைகளுக்கு 8.87 மில்லியன் ரிங்கிட் நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தர்மா மடானி திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 168 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு 3.36 மில்லியன் ரிங்கிட் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 627 கோயில்கள் 12.54 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றுள்ளது.

புத்ராஜெயா, மெனாரா பெர்கேசோவில் இன்று நடைபெற்ற நிதி வழஙக்ம் நிகழ்வில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் சார்பில் மனிதவள அமைச்சின் செயலாக்க துணைத் தலைமைச் செயலாளர் சுடெக்னோ அகமது பெலோன் கலந்து கொண்டு, அமைச்சரின் உரையை வாசித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட மித்ராவின் தலைமை இயக்குநர் கே.ரவீந்திரன் நாயர் கூறுகையில் இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்ய இந்த நிதி மிகவும் வெளிப்படையான முறையில் விநியோகிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.
கல்வி, மனித மூலதன மேம்பாடு மற்றும் சமூக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் மலேசிய இந்தியர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் 'மலேசியா மடானி' கொள்கையின் இலக்குகளை அடைவதில் இந்த இரண்டு திட்டங்களும் மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் ரவீந்தர நாயன் கூறினார்.











