பேரா, மே 30-
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி பேரா, லுமூட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒன்று, மற்றொன்றுடன் மோதி, விழுந்து நொறுங்கி, பத்து வீரர்கள் உயிரிழந்த கோர விபத்து தொடர்பான முழு விசாரணை அறிக்கை இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டு ஹெலிகாப்டர்களின் ஒன்று, அனுமதிக்கப்பட்ட உயரத்திலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலும் செல்லாததால், அந்த ஹெலிகாப்டர், மற்றொரு ஹெலிகாப்டருடன் மோதி, பத்து பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுமூட்டில் அரச மலேசிய கடற்படையின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்காக ஒத்திகையில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்களில் 7 பேர் பயணம் செய்த HOM-AW139 ரக ஹெலிகாப்டரும், மூவர் பயணம் செய்த Fennec ரக ஹெலிகாப்டரும் மிக நெருக்கமான சூழலில் மோதிக்கொண்டு விழுந்து நொறுங்கின.
இதில் மூவர் பயணம் செய்த Fennec ரக ஹெலிகாப்டரே இந்த விபத்திற்கு மூலக் காரணமாகும். அது, தன்னுடன் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த 7 பேர் பயணம் செய்த HOM-AW139 ரக ஹெலிகாப்டரை மிக நெருக்கமான தூரத்தில் மோதியுள்ளது என்று அரச மலேசிய கடற்படை இன்று வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.








