கோலாலம்பூர், மே 29-
அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் அரசியவாதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க குத்தகை கிடைக்குமானால் அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று MCW எனப்படும் மலேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
அரசாங்க சேவையில் இருப்பவர்கள் குறிப்பாக அமைச்சர், துணை அமைச்சர் போன்ற பதவிகளில் வீற்றிருப்பவர்கள், தாங்கள் சார்ந்த அரசாங்க நிர்வாகம் வெளிப்படையாக செயல்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரசாங்க குத்தகை குறித்து SPRM-மிடம் அறிவிப்பது தார்மீக கடப்பாடாகும் என்று MCW அமைப்பின் தலைவர் ஜெய்ஸ் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்ப வகிக்கின்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தகுதிபாடு அடிப்படையில் அரசு குத்தகையை பெறுவதில் தவறுயில்லை. ஆனால், அந்த குத்தகை கிடைக்கப்படுவதற்கு பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க அது குறித்து SPRM-மிடம் முன்கூட்டியே அறிவிப்பது மூலம் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்க முடியும் என்று ஜெய்ஸ் அப்துல் கரீம் குறிப்பிட்டார்.
DAP- யை சேர்ந்த இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ்- வின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டியை தலைமை செயல்முறை அதிகாரியாகவும், தோற்றுநராகவும் கொண்டுள்ள Asia Mobility Technologies Sdn. Bhd. நிறுவனத்திற்கு சிலாங்கூர் மாநில அரசின் முக்கிய குத்தகையான DRT எனப்படும் ப்ரோஜெக் ரிண்டிஸ் டிமாண்ட் ரெஸ்பான்சிவ் டிரான்ஸிட் டெண்டர் வழங்கப்பட்டு இருப்பது தொடர்பில் வெடித்துள்ள சர்ச்சை குறித்து கருத்துரைக்கையில் ஜெய்ஸ் அப்துல் கரீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வகிக்கின்றவர்கள், அரசு கேந்திரத்தில் தங்கள் நலன் சார்ந்த அம்சங்கள் இருக்கக்கூடாது என்பதை உறுதிமொழி எடுத்துக்கொண்டப் பின்னர்தான் பதவியேற்கின்றனர். பின்னர் தங்கள் நலன் சார்ந்த தரப்பினர், தாங்கள் அங்கம் வகின்ற அரசாங்கத்தில் குத்தகை பெற்று இருப்பதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என்று மசீச. இளைஞர் பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது.








