நெகிரி செம்பிலான், மே 28-
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 36 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம், நேற்று மாலையில் சிரம்பான், ராயல் சுங்காய் உஜோங் கிளப்- பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் எம். திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கூட்டத்தில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் S. வீரப்பன், மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ந. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த ஆண்டுக்கூட்டத்தில் நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கருடா வர்த்தக விருது விழா, இவ்வாண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதாக சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு அறிவித்தார்.
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் இளம் தொழில்முனைவர்களுக்கான தலைவர் அரவிந்தன் ராஜகோபால், 2024 ஆம் ஆண்டுக்கான கருடா வர்த்தக விருது விழாவின் ஏற்பாட்டுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்ததகத்தில் சாதிக்கத் துடிக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை சேர்ந்த இந்திய வர்த்தகர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு பிரிவுகளில் மொத்தம் 40 விருதுகள், 2024 ஆம் ஆண்டு கருடா வர்த்தக விருது விழாவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அரவிந்தன் ராஜகோபால் தெரிவித்தார்.
இவ்விருதளிப்பு விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இந்திய வர்த்தகர்கள், தொழில்முனைவர்கள், தொழில்நிபுணர்கள் தாங்கள் சார்ந்துள்ள துறையில் கொண்டுள்ள சிறப்பான பங்களிப்புக்காகவும், குறிப்பிடத்தக்க அடைநிலைக்காகவும் அவர்களை அங்கீரித்து, தொடர்ந்து ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கருடா வர்த்தக விருது விழாவை சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்வதாக அரவிந்தன் ராஜகோபால் குறிப்பிட்டார்.








