புக்கிட் மெர்தாஜாம், மே 06-
நாட்டில் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நேரடியாக தெரிந்து கொள்வதற்கு பிரதமர் உட்பட ஒவ்வொரு தலைவரும் ஒரு கிராமத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்தார்.
இது தொடர்பாக, வருகின்ற புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் தமது திட்டத்தை முன்வைக்கபோவதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இத்திட்டம் அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அரசு தொடர்பான நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக காணப்படும் என்று புக்கிட் மெர்தாஜாம், கெலெரி பெஜுவாங் செரொக் தொக் குன்னில் இன்று நடைபெற்ற ஐடில்ஃபிட்ரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் கூறினார்.
மாவட்ட மற்றும் அரசு அதிகாரிகள் தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து மேற்கொள்வதை தவிர, இந்த திட்டம் கிராம மக்களிடையே எழுகின்ற பிரச்னைகளை கையாள்வதற்கு ஒரு சிறந்த களமாக அமையும் என்று அவர் வலியுறுத்தினார்.
கிராம தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒதுக்கீடுகளை ஒருங்கிணைக்க இந்த முதல் முன்மொழிவு பங்காற்றும் என்று நம்புவதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.








