பெட்டாலிங் ஜெயா, ஜூன் 06-
DAP கட்சியின் இரு தலைவர்களை உட்படுத்தி எழுந்துள்ள சர்ச்சைக்குரிய விவகாரங்களால், அக்கட்சிக்கும் பக்காத்தான் ஹாராப்பான்-னுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்பட போவதில்லை என டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின் தெரிவித்துள்ளார்.
இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ-வின் கணவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு சிலாங்கூர் அரசாங்கம் குத்தகையை வழங்க தேர்வு செய்தது, பினாங்கில் மேல்முறையீட்டு வாரியத்தில், தனது மாமனாரை அம்மாநில இரண்டாவது துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ நியமித்தது உள்ளிட்ட விவகாரங்களை மேற்கோள்காட்டி அவர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்.
இதற்கு முந்தைய அரசியல்வாதிகள், மிகப் பெரிய தொகையிலான குத்தகைகளைப் பெற்றுள்ளதோடு அவற்றில் ஊழலையும் அதிகார முறைகேடுகளையும் புரிந்துள்ளனர்.
அவற்றுடன் ஒப்பிடுகையில், DAP-யின் அவ்விரு தலைவர்களை உட்படுத்திய அவ்விவகாரங்கள் சிறிய பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்படுவதாக, ஜேம்ஸ் சின் கூறினார்.
மற்றோர் அரசியல் ஆய்வாளரான மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஸ்மில் தயேப் கூறுகையில், DAP கட்சி நேபோட்டிசம் எனப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதாயமளிக்கும் போக்கை கடைப்பிடிப்பது போன்ற தோற்றத்தை அவ்விரு விவகாரங்களும் ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.
குறிப்பாக, எதிர்க்கட்சிகள் அவ்விவகாரங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதை, அஸ்மில் தயேப் சுட்டிக்காட்டினார்.








