பெர்சாத்துவுடனான அரசியல் உறவை பாஸ் முறித்துக் கொண்டதையடுத்து, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது குறித்து பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினரான டாக்டர் அஃபிஃப் பஹார்டின், இந்த முன்னேற்றத்தை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் என்று வர்ணித்துள்ளார்.
மேலும், மலாய் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், அதனை முன்னெடுத்துச் செல்லும் நம்பகத்தன்மையும் அனுபவமும் முகைதீன் யாசினுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், பெரிக்காத்தான் நேஷனலின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கவும், அதிகாரப் போட்டி மற்றும் சுயநலன் சார்ந்த மோதல்கள் நிறைந்த அரசியல் சூழலிலும் அதனை திறம்பட வழிநடத்திச் செல்லவும் முகைதீன் யாசின் மிகவும் பொருத்தமான தலைவர் என்றும் டாக்டர் அஃபிஃப் பஹார்டின் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.








