பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளை இணைக்கும் புதிய ஷா ஆலாம் எல்.ஆர்.டி3 வழித்தடத்தின் இலவச சேவை, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராபிட் கே.எல் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த புதிய பொதுப் போக்குவரத்து முறையைப் பழகிக் கொள்ளவும், அவர்களின் தினசரி பயணச் செலவைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையின் கீழ், எல்.ஆர்.டி3 ரயில்கள் மட்டுமின்றி, அதனுடன் இணைக்கப்பட்ட ஃபீடர் பேருந்துகள் மற்றும் நிலையங்களில் உள்ள ‘பார்க் அண்ட் ரைடு’ வாகன நிறுத்த வசதிகளையும் பொதுமக்கள் முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முன்னதாக, கடந்த ஜூன் 28 அன்று இந்த எல்.ஆர்.டி3 வழித்தடத்தைத் திறந்து வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜூன் 29 முதல் ஜூலை 31 வரை ஒரு மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது அந்தச் சலுகை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.








