சிலாங்கூர், சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 14 பொருட்கள் ஏலம் விடப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கிற்கு வழங்க வேண்டிய 66,600 ரிங்கிட் அவதூறு வழக்கு நிலுவைத் தொகையை ஜமால் செலுத்தியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரேசா கோக்கின் வழக்கறிஞர் எஸ்.என்.நாயர் கூறுகையில், "வருகிற திங்கட்கிழமை நடைபெறவிருந்த பொது ஏலம், ஜமால் நேற்று மாலை வழங்கிய காசோலையின் அனுமதி, நிலுவையில் உள்ளதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காசோலை அங்கீகரிக்கப்பட்டதும் ஏல நடவடிக்கைகள் முழுமையாக ரத்து செய்யப்படும்," என்றார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் திரேசா கோக்கிற்கு 3 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க ஜமாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில் மீதமிருந்த நீதிமன்றச் செலவு மற்றும் வட்டித் தொகையை வசூலிக்க திரேசா கோக் சொத்து பறிமுதல் ஆணையைப் பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








