நாடு முழுவதும் உள்ள சுமார் 90 லட்சம் மக்கள், 'சும்பங்கான் துனாய் ரஹ்மா' மற்றும் 'சும்பங்கான் ஆசாஸ் ரஹ்மா' ஆகிய நிதியுதவித் திட்டங்களின் கீழ் நன்மையடைந்து வருகின்றனர் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
இந்த இரண்டு திட்டங்களின் அமலாக்கத்திற்காக நடப்பு ஆண்டில் அரசாங்கம் 1,500 கோடி அல்லது 15 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டின் 1,000 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை விட அதிகமாகும். இதில் சரவாக் மாநிலத்தில் மட்டும் 9 லட்சம் பயனாளிகளுக்காக 130 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார்.
மேலும், வங்கி கணக்கு இல்லாத பயனாளிகள் தங்களின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காகச் சரவாக்கில் 20 இடங்களிலும், சபாவில் 17 இடங்களிலும் நிதியமைச்சகம் சிறப்புப் பணப்பட்டுவாடா மையங்களை ஏற்பாடு செய்துள்ளது. இது தவிர, நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என் வங்கி கிளைகளிலும் பயனாளிகள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், தகுதியுடையவர்கள் சாரா திட்டத்தின் கீழ் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை மாதந்தோறும் வாங்கிக் கொள்ள முடியும் என்றும் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா தெரிவித்தார்.








