திரெங்கானு, டுங்குன், கம்பங் கோலா அபாங் பகுதியில், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தடுத்த 79 வயது பாட்டியை இரும்புச் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிய 25 வயது பேரன் போலீஸ் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்துத் டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் அப் ஹாலிம் நிக் மாட் கூறுகையில், "நேற்று மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சந்தேக நபர் பாட்டியை கீழே தள்ளி, இரும்புச் சுத்தியலால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உடனடியாகத் டுங்குன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்றார்.
கைது செய்யப்பட்டுள்ள அந்தப் பேரனிடம் மனநல நோயாளிக்கான அட்டை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரிடமிருந்த இரும்புச் சுத்தியலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று நிக் அப் ஹாலிம் தெரிவித்தார்.








