பேராக், செலாமாவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில், கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாடம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை மின்விசிறி விழுந்ததில், இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் தந்தை 2024-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு வலிகள் மற்றும் அவதிகளுக்காக 6 ஆயிரம் ரிங்கிட் பொது இழப்பீடு வழங்க செலாமா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளித் தலைமை ஆசிரியர், மாவட்ட மற்றும் மாநில கல்வி அலுவலகங்கள், கல்வித் தலைமை இயக்குநர் மற்றும் அரசாங்கம் ஆகிய ஐந்து தரப்பினரும் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் என மாஜிஸ்திரேட் ஆர். பிரபாகரன் தீர்ப்பளித்தார்.
மின்விசிறியை முறையாகப் பராமரிக்கத் தவறியதே விபத்திற்குக் காரணம் என மாஜிஸ்திரேட் சுட்டிக்காட்டினார். ஆசிரியர்களின் "பார்த்து கேட்டு" முடிவு செய்யும் சாதாரணப் பராமரிப்பு முறைகள் போதாது என்றும், முறையான பராமரிப்பு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்த விபத்தில் மாணவியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த மாணவி முழுமையாகக் குணமடைந்துள்ளார்.








