கோயம்புத்தூரிலுள்ள ‘லீ மெரிடியன்’ ஹோட்டலில், கடந்த ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
செயல் நிறுவனத்தின் நிறுவனர் வெங்கடேஷ் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தொழில்முனைவோர், கல்வியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், மருந்துத் துறை நிர்வாகிகள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத் தலைவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், தொழில் ஆலோசகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
இரு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், வெற்றிகரமான தொழில்முனைவோர்களின் அனுபவங்கள், தொழில் வளர்ச்சிக்கான புதிய உத்திகள், தலைமைத்துவம், புதுமை, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வணிக வளர்ச்சி தொடர்பான பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன. புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கும், தங்களது நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பும் தொழில்முனைவோருக்கும் இம்மாநாடு பயனுள்ள வழிகாட்டியாக அமைந்தது.
இந்த மாநாட்டில் தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் வேலுமணி, விஜய் டிவி புகழ் கோபிநாத், சிந்தனையாளர் மற்றும் ஆன்மிகப் பேச்சாளர் சொல்வேந்தர் சுகி சிவம், மலேசியாவைச் சேர்ந்த சன்ஷைன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தாளாளர் டாக்டர் ஆர்.வி. ஷாம் பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, தங்களது அனுபவங்களையும் வெற்றிப் பயணங்களையும் பகிர்ந்து கொண்டனர். பிரபல நடிகர் ஆரியும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
மலேசியாவில் இருந்து சிறப்பு பேச்சாளராகப் பங்கேற்ற டாக்டர் ஆர்.வி. ஷாம் பிரசாத், கல்வித் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட தனது பயணம், கல்வி மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கிய அனுபவங்கள், தொழில்முனைவோராக எதிர்கொண்ட சவால்கள் மற்றும் உலகளாவிய கல்வி விரிவாக்கம் குறித்த தனது பார்வையை ஊக்கமூட்டும் வகையில் பகிர்ந்து கொண்டார்.
அவரது உரையில், “கல்வி என்பது ஒரு சேவை மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு. கனவுகளை இலக்காக மாற்றி, இலக்குகளை சாதனைகளாக மாற்றுவதற்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான கற்றலே வெற்றியின் அடித்தளம்” என்று வலியுறுத்தினார். அவரது உரை இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் கல்வித் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், தரமான தொழில்முனைவோர் மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய செயல் நிறுவனத்தின் நிறுவனர் வெங்கடேஷ் நாராயணசாமி மற்றும் அவரது குழுவினருக்கு டாக்டர் ஷாம் பிரசாத் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தொழில்முனைவோர்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, அனுபவப் பகிர்வின் மூலம் புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்றும், இதுபோன்ற மாநாடுகள் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டின் முதல் நாளான ஜூன் 26 அன்று, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூகப் பங்களிப்பாளர்களுக்கு ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்றுள்ள இந்த மாநாடு, தொழில்முனைவோர் உலகின் முக்கிய அறிவுப் பரிமாற்ற மேடையாக உருவெடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ‘செயல் பிஸினஸ் கான்க்ளேவ்’ சிங்கப்பூரில் நடைபெறும் என நிறுவனர் வெங்கடேஷ் நாராயணசாமி அறிவித்தது பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிறைவாக, தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை ஒரே மேடையில் இணைக்கும் இத்தகைய மாநாடுகள், புதிய சிந்தனைகள் மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும், வருங்காலங்களிலும் உலகத் தமிழர் தொழில்முனைவோருக்கான முக்கிய சந்திப்பாக இந்த மாநாடு தொடர்ந்து வளர வேண்டும் என்றும் டாக்டர் ஆர்.வி. ஷாம் பிரசாத் வாழ்த்துத் தெரிவித்தார்.




















