மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் முன்னாள் தலைமை ஆணையராக பணியாற்றிய அசாம் பாக்கி, ஓய்வுக்குப் பிறகு தற்போது, தேசிய நிதி குற்றத் தடுப்பு மையமான என்.எஃப்.சி.சியின் ஆலோசனை வாரிய உறுப்பினராக அவரது தனிப்பட்ட தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து என்.எஃப்.சி.சி தலைமை இயக்குநர் ஷாம்ஷுன் பஹாரின் ஜாமில் கூறுகையில்,மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னரின் ஒப்புதலுடன், கடந்த 2024-ஆம் ஆண்டு, செப்டம்பர் 20 – ஆம் தேதி, அசாம் பாக்கி வாரியத்தில் இணைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் எனவும், அது 2027 செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் அசாம் பாகியின் உறுப்பினர் பதவி, அவர் முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையராக இருந்ததுடன் தொடர்புடையது அல்ல என்றும், அவரது மூன்று ஆண்டு பதவிக்காலம் நிறைவடையும் வரை அந்த நியமனம் தொடரும் என்றும், அதற்கு முன்பாக மாமன்னர் விரும்பினால் மட்டுமே அந்த நியமனத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் ஷாம்ஷுன் பஹாரின் தெரிவித்துள்ளார்.
அசாம் பாக்கி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், கடந்த மே மாதத்தில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.
அவருக்குப் பதிலாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான அப்துல் ஹலீம் அமான் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையராக பொறுப்பேற்றார்.








