ஜோகூர் மாநிலத்தில் வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி இன்று வெள்ளிக்கிழமை தமது அதிரடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், ஜோகூரை "தென்கிழக்கு ஆசியாவின் ஷென்சென்" நகரமாக உருவாக்கும் தொலைநோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷென்சென் நகரம், ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக தொழில்நுட்ப மையமாகவும், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் வளர்ந்ததை முன்மாதிரியாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வரும் 20 ஆயிரம் மலேசிய தொழில்முறை நிபுணர்களை வரும் 2031-ஆம் ஆண்டிற்க்குள் ஜோகூருக்கு மீண்டும் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஊக்கத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஜோகூர் மாநில மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் பக்கத்தான் ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
அதன்படி, பி40 மற்றும் எம்40 வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 5 லட்சம் ஜோகூர் மக்களுக்கு அதிகபட்சம் 1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொது சுகாதார காப்பீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 50 ஆயிரம் இளம் குடும்பங்களுக்கு முதல் வீடு வாங்குவதற்கான முன்பணமாக 8 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும், எளிய நிதியுதவி, வாடகை செலுத்தி பின்னர் சொந்தமாக்கும் வாடகை-வாங்குதல் திட்டம் திட்டம் மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 80 ஆயிரம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜோகூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், பெண்கள் மீண்டும் வேலைவாய்ப்பில் இணைய உதவும் வகையில் 250 மடானி குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாதத்திற்கு 50 ரிங்கிட் மதிப்பில் பொது போக்குவரத்து பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பக்கத்தான் ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.








