நாட்டின் எல்லை நுழைவாயில்கள் வழியாகச் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமானப் போக்குவரத்துப் பணியாளர்கள் குறி வைக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் அபாயம் குறித்து அவர்கள் முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் பாதுகாப்பான சமூகத்திற்கான கூட்டணியின் தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தை வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் மலேசிய விமான ஓட்டி ஒருவர் ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிலையப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவேகமான முடிவை வரவேற்றுள்ள லீ லாம் தை, "விமான நிலையப் பாதுகாப்பு என்பது சாதாரணப் பயணிகளின் சோதனையோடு மட்டும் நின்று விடக்கூடாது. ஊழியர்களின் பின்னணி சரிபார்ப்பு, கடுமையான கண்காணிப்பு, மற்றும் கடத்தல் கும்பல்களின் அதிநவீன உத்திகளைக் கண்டறியும் வகையில் காவல்துறை, சுங்கத்துறை, குடிவரவுத்துறை போன்ற அனைத்து அமலாக்க முகமைகளும் ஒருங்கிணைந்து, ரகசியத் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து செயல்பட வேண்டும்," என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








