ஜப்பானில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் மூன்று மலேசிய யானைகளை மீண்டும் மலேசியாவிற்கு கொண்டு வர அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.
இது தொடர்பான குறிப்பாணையை பாரிசான் நேஷனல் இளைஞர் பிரிவின் சமூக விவகாரப் பிரிவு தலைவர் நியோ சூ சியோங், மசீச கட்சித் தலைவரும் மற்றும் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினரான வீ கா சியோங்கிடம் நேற்று ஒப்படைத்தார்.
நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்ற அச்சந்திப்பில், ஜப்பானின் தென்னோஜி உயிரியல் பூங்காவில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் மலேசிய யானைகளான தாரா, அமோய், கெலாட் ஆகிய மூன்றையும் மீண்டும் மலேசியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து வீ கா சியோங் வெளியிட்டுள்ள தகவலில், இந்த விவகாரத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி, மூன்று யானைகளின் நலன் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைக்கு அதிக கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.








