May 22, 2026
Thisaigal NewsYouTube
இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்

Share:

கோலா கிராய், ஏப்ரல் 25-

கிளந்தான், கோலா கிராய்-யில் நிகழ்ந்த இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்.

நேற்று மதியம் 12.30 அளவில் ஜம்பாத்தான் தோசெங் சுங்கை பத்து எனுமிடத்தில் நிகழ்ந்த முதல் சம்பவத்தில், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் செலுத்திய யமாஹா Y15ZR மோட்டார்சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள மரம் ஒன்றை மோதியது.

அதில், படுங்காயங்களுக்கு இலக்கான அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, கோலா கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் மஸ்லான் மாமாட் தெரிவித்தார்.

மற்றொரு விபத்தில், ஜம்பாத்தான் பாஹி அருகேயுள்ள ஜாலான் கோத்தா பாரு - குவா முசாங் சாலையின் 76ஆவது கிலோமீட்டரில் வாகனத்தில் பயணித்த தம்பதியர் உயிரிழந்தனர்.

54 வயதுடைய ஆடவர் செலுத்திய ஹோண்டா ரக வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்தடத்தில் நுழைந்ததோடு, இடது புறத்திலுள்ள தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தின் போது வாகனத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 50 வயதுடைய மனைவியும் வாகனத்தினுள் சிக்கிக் கொண்ட அவ்வாடவரும் கடும் காயங்களுக்கு இலக்கானதாக, மஸ்லான் மாமாட் கூறினார்.

Related News