தாப்பா, குனோங் பத்து பூத்தே மலையில் கடந்த மே 24 அன்று காணாமல் போன 49 வயது மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சாலுடின், இரண்டு வாரங்களுக்குப் பிறகு பழங்குடியின மக்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். காட்டில் உணவின்றி தவித்ததால் அவர் சுமார் 10 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது தாப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல மன உறுதியுடன், பேசுவதற்கும் உணவு உண்பதற்கும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வான் இம்மி சலிம் தெரிவித்துள்ளார்.
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோ அ. சிவநேசன் மற்றும் அஸ்லான் ஹெல்மி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது நலம் குறித்து விசாரித்தனர். ஜாஸ்லிண்டா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.








