மலேசியாவின் ஒன்எம்டிபி நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜோ லோவிற்கு சொந்தமான ஆடம்பர வில்லா வீட்டை பறிமுதல் செய்ய சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சைப்ரஸ் அரசு மற்றும் அந்நாட்டின் பணமோசடி தடுப்பு பிரிவு இணைந்து தாக்கல் செய்த மனுவை ஏற்று நிகோசியா மாவட்ட நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜோ லோவின் வழக்கறிஞர்களும் இந்த பறிமுதல் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
சைப்ரஸின் அய்யா நாபா கடற்கரை நகரில் அமைந்துள்ள இந்த வில்லாவின் மதிப்பு சுமார் 30.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஆகும். சைப்ரஸ் வரலாற்றிலேயே, குற்றவியல் தண்டனை ஏதுமின்றி ஒருவரது சொத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது இதுவே முதல் முறையாகும்.
ஒன்எம்டிபி நிதியத்திலிருந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்ததாக ஜோ லோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு சைப்ரஸ் குடியுரிமை பெற்ற இவரது கடப்பிதழ் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.








