கோலாலம்பூர்-ரில் நடைபெற்றுவரும் 2024 ஆசிய தற்காப்பு சேவை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியில் பங்குக்கொண்டுள்ள எந்தவோர் அனைத்துலக நிறுவனங்களின் வர்த்தக விவகாரங்களில் மலேசியா ஒரு போதும் தலையிடாது என தற்காப்பு அமைச்சர் , டத்தோ ஶ்ரீ முகமது கலேட் நோர்டின் தெரிவித்தார்.
மலேசியா, வர்த்தகங்களை சுந்ததிரமாக மேற்கொள்ளக்கூடிய ஒரு நாடு. எந்தவோர் அனைத்துலக தொழில்துறையினரும், அவர்கள் சார்ந்த பொருள்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இங்கு ஏற்படுத்தி தரப்படுவதாக கூறினார்.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தருவிக்கும் இரு அனைத்துலக நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கண்காட்சியில், பங்கேற்றுள்ளதாகவும் அவற்றிற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டுமென பெர்சாத்து கட்சியின் அனைத்துலக பிரிவு தலைவர் டத்தோஶ்ரீ சைபுதீன் அப்துல்லா உள்பட சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அது குறித்து கருத்துரைத்த போது அக்கூற்றை முன்வைத்த கலீத் நோர்டின், இக்கண்காட்சி, குறிப்பிட்ட நாடுகளுக்கும் நிறுவனங்களும் சாதகமாகவோ கூடுதல் பலத்தையோ அளிக்கவில்லை என்றார்.
அதில் பங்கேற்றுள்ள நாடுகள், அவர்களது பாதுகாப்பு தொடர்பான நிபுணத்துவத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் பகிர்ந்துக்கொள்வதற்கான ஒரு தளமாகவே அது அமைந்துள்ளதாக கலீத் நோர்டின் விளக்கினார்.








