ஏசிபி அந்தஸ்தில் உள்ள தனது உயர் போலீஸ் அதிகாரியின் பணிக்கு இடையூறு விளைவித்ததுடன், அவரை கடுஞ்சொற்களால் திட்டியதாக இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
34 வயது கே. கோபி என்ற அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், கடந்த மே 5 ஆம் தேதி மதியம் 12.10 மணியளவில் கோலாலம்பூர், டாங் வாங்கி , மெனாரா 2 புக்கிட் அமான், மூன்றாவது மாடியின் டி6 பிரிவில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் உயர் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப போலீஸ் விசாரணை அறிக்கைக்கு விளக்கம் அளிக்கத் தவறியதுடன் ஏசிபி கைரில் அசுவாத் அப்துல் அஜீஸ் என்ற போலீஸ் அதிகாரியின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் கோபிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது 10 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் கோபி, குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








